Thursday 14 December 2017

புத்தகம்- வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்......



பறவை புத்தகங்கள் தமிழில் குறைவு என்பது எப்படி உண்மையோ அதேபோல் நிறைய புதியவர்கள் எழுத வந்து கொண்டிருப்பதும் உண்மையே. அப்படி ஒரு புதிய புத்தகத்தை சமிபத்தில் படிக்க நேர்ந்தது.

“வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்” என்ற தலைப்பு, கபாலிடா என்பது போல் உள்ளது. பறவைகளை பார்ப்பது, அவற்றை தெரிந்து கொள்வது, விவாதிப்பது போல், பறவைகளின் வாழிட அழிப்பு அதனால் அவற்றின் எண்ணிக்கை குறைதல் அல்லது முழுவதும் அற்று போதல் போன்றவற்றை  பற்றி புத்தகத்தில் விரிவாக நா.வினோத் குமார் எழுதி உள்ளார். இந்து தமிழ் நாளிதழில் பணிபுரியும் வினோத், உயிர்மூச்சு பகுதியில் எழுதிய கட்டுரைகளை தொகுத்து, புத்தகமாக தந்துள்ளார்.

ஆரம்ப கட்டுரை கான மயில் மற்றும்  புத்தகத்தின் நடுவே ஒரு கானமயில் கட்டுரை உள்ளது. இரண்டு கட்டுரையும் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று கானமயிலை பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கு முழுகாரணம் மனிதர்கள்தான் என்பது இதில் சோகமே. பறவைகளின் வாழிடங்களை அழிக்காதிர்கள் அப்படி அழிக்காமல் இருந்தால் பறவைகளே தன் வாழ்கையை பார்த்துகொள்ளும் என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

மயில்தான் தேசியபறவையாக வர வேண்டும் என்று வாதம் செய்து வரவைத்த கிருஷ்ணன் அவர்கள், பின்பு மயிலை யூஸ்லஸ் செட் ஆப் பேர்ட்ஸ் என்று குறிபிடுகிறார் என்ற வரியை படிக்கும்பொழுது ஆச்சரியமாக இருந்தது. கானமயில் எண்ணிக்கை 300க்கும் கீழே குறைந்து விட்டது. அவற்றை பாதுகாக்க சில முயற்சிகள் எடுக்கபட்டாலும் எந்த அளவுக்கு அவை பயன் தரும் என்று தெரியவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

பூநாரை திருவிழாவிற்காக மும்பை சென்று, அங்கு நடந்ததை நுணுக்கமாக பார்த்து, பதிவு செய்திருப்பது சிறப்பு. இவர் சென்றிருந்த ஆண்டோடு திருவிழா, வளர்ச்சி பணிக்காக நிறுத்தபடுவதா மகாராஷ்ட்ரா அரசு அறிவித்திருப்பது, கானமயில் பறவைக்கு அடுத்து பூநாரைக்கும் சோதனை என்று தெரிகிறது. தியோடர் பாஸ்கரன் அவர்கள் அடிக்கடி ஒரு விஷயத்தை குறிப்பிடுவார். அதாவது ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத வார்த்தை Development (வளர்ச்சி) என்று குறிப்பிடுவது இங்கு நினைவிற்கு வருகிறது.

உயிரிணங்களை அழித்து மனிதர்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்துவது எந்த அளவுக்கு சரி என்ற விவாதம் தேவை என்றே தோன்றுகிறது.

சென்னை-குரோம்பேட்டையில் காகத்தின் எண்ணிக்கையை காட்டிலும் நிறைய பிணந்தின்னி கழுகுகள் இருந்துள்ளது. இப்பொழுது எங்கோ ஒரு மூளைக்கு தள்ளபடிருப்பதற்கு முக்கிய காரணமான கால்நடைக்கு தரப்படும் வலி நிவாரன மருந்துகள் எந்தளவுக்கு கழுகை இறக்க செய்கின்றன என்பது பற்றிய கட்டுரை சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தகூடியது. வலி மருந்து மட்டுமே காரணம் இல்லை சடலத்தில் தடவப்படும் விஷமும் இறப்பிற்கு முக்கிய காரணம் என்று வினோத் சொல்கிறார்.

கேவ்லாதாவ் பறவைகள் சரணாலயத்தின் சிறப்புகளை விரிவாக எழுதியிருப்பதை படிக்கும் அனைவரும் அங்கு செல்லவேண்டு என்ற நினைப்பு வரும். சென்னையில் இருக்கும் பாரிஸ் சென்றால் நிறைய ரிக்ஷாவை பார்க்கலாம் அதேபோல் இந்த சரணாலயத்தில் நம்மை அழைத்து செல்வதற்கு 123 சைக்கள் ரிக்ஷாக்கள் உள்ளது. அவற்றில் அமர்ந்து பறவைகளை பார்த்து உலா வருவது மட்டுமில்லாமல், ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கு அணைத்து பறவைகளையும் பற்றியும் தெளிவாக, நூனுக்கமாக தெரிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவருவது ஆச்சரியமாக உள்ளது.

வினோத் எந்த கட்டுரையும் இணையத்தில் படித்து எழுதவில்லை என்று தெரிகிறது. கட்டுரைகளில் இருக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று சுற்றி பார்த்து, அங்குள்ள மக்களிடம் பேசி, பின்பு விரிவாக எழுதுகிறார். அப்படி ஒரு இடமாக சென்னை தியசாபிகல் சொசைட்டியில் வேட்டைக்கார ஆந்தையை பார்த்து பதிவு செய்து உள்ளார். மிக அபூர்வமாக தென்படும் இந்த ஆந்தையை மிக நீண்ட காலத்திற்கு பிறகு இங்கு பார்த்து  பதிவு செய்யபட்டுள்ளது.

தேசிய பறவையான மயில் சுற்றுச்சூழலுக்கு பயன்தராதவை, நாட்டின் பெரும்பாலும் இடங்களில் இந்த பறவையை தொந்தரவாக பார்க்கபடுகின்றன என்று வரிகள் எனக்கு புதியதாக இருந்தன.

தமிழ் பறவையாளர் நிகழ்ச்சி பற்றிய கட்டுரை, இந்தியாவில் மொத்தம் 1263 பறவை வகைகள் மட்டுமே உண்டு கட்டுரை, தவளை வாயனை தேடிய கட்டுரை என்று மொத்தம் பதினாறு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம். .

சிறிய குறைபாடுகள் மட்டுமே புத்தகத்தில், குறிப்பாக 26ம் பக்கத்தில் கடைசி பத்தி இப்படி தொடங்குகிறது “ சின்ன வயதில் இருந்தே பறவைகள் மீது .....” இந்த பத்தி அடுத்து அடுத்து இரண்டு முறை அச்சாகி உள்ளது. அதே போல் அதன் அடுத்த பத்தியும் இரண்டு முறை அச்சாகி உள்ளது..

மற்றும் பக்கம் 32ல் கடைசி பத்திக்கு முன் பத்தி “ பலருக்கு ராஜஸ்தான் என்றால் .....” இந்த பத்தியும் இரண்டு முறை அச்சாகி உள்ளது. இவையெல்லாம் பெரிய குறையில்லை என்பதால், புத்தகத்தை முழுவதமாக படித்து முடித்த பிறகு, பறவைகளின் இடங்கள் தொடர்ந்து அழிக்கபட்டு வருவதை சிறப்பாக, புத்தகம் முழுவதும் வினோத்குமார் பதிவு செய்துள்ளார். படித்த பிறகு, நம் நினைவிலும் அதுவே நின்றுகொண்டே இருக்கிறது.

-செழியன்

lapwing2010@gmail.com

3 comments:

  1. Good to know that there is a book available on Birds in Tamil. Thanks for your review

    ReplyDelete
  2. Brought the book. Thank you.

    ReplyDelete
  3. Please send Wildlife association on Rajapalayam and Paul pandian a free copy duly signed.

    ReplyDelete