Monday 31 October 2016

பறவை நோக்குதல் : தொடர் - 5




பறவை நோக்குதல் என்ற இந்த தொடரில் இதுவரை பைனாகுலர் தேர்வு செய்வது, உன்னி கொக்கு, நாகணவாய், கரிச்சான், வென்மார்பு மீன்கொத்தி போன்ற பறவைகள், IUCN அமைப்பின் செயல்பாடு மற்றும் RED LIST, பெயர் தெரியாத ஒரு பறவையை பார்த்து பெயர் கண்டறிதல்(பறவைகளின் அலகு, வால், இறக்கை, உடல் அமைப்பு, வாழும் இடம்) போன்றவற்றை பார்த்தோம்.

மழை காலம் வரப்போகிறது மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வர தொடங்கிவிட்டதால் பார்வையாளர்கள் சென்று பார்ப்பதற்கு சரணாலய்தையும் திறந்துவிட்டார்கள் என்பது பறவை நோக்குபவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக இருக்கும்.

ஆரம்பத்தில் மரங்கள் நடுவில் வாழ ஆரம்பித்த மனிதன் இன்று சுவர்கள் நடுவில் வாழ்வதால் பறவை என்பது நம்முடம் வாழும் உயிரனம் இல்லை என்று நினைத்து, மரங்கள் இல்லாத வீட்டை அமைத்து கொண்டதால் குழந்தைகளுக்கு மூன்று, நான்கு பறவைகளுக்கு மேல் இன்று தெரிவதில்லை. 

இன்றைய பள்ளி புத்தகங்களில் கூட பறவைகளை பற்றி கற்று தரும் அளவுக்கு அதில் பாடங்கள் இல்லை. தனியாக சில அமைப்புகள் மட்டுமே பறவை பார்பதற்கு மற்றும்  அழைத்து செல்வதற்கு என்று இருப்பதால் அவை தமிழ்நாடு முழுவதும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. 

காகம் மற்றும் காகங்கள் போல் இருக்கும் பறவைகளை பார்ப்போம்

செம்போத்து (SOUTHERN COUCAL) :

காகத்தின் அளவு உள்ள செம்போத்து குயில் இனத்தை சேர்ந்த பறவையாகும். மரத்தில் குயில் வாழும் ஆனால் செம்போத்து தரையில் வாழ்க்கூடியது மற்றும் கூடு கட்டி முட்டை இடும் பறவையாகும்.

மிளிரும் கருமை நிற உடலும் அடர் காப்பி நிற இறக்கையும் உடையது. அதிக தூரமும், உயரமாகவும் பறக்க முடியாத பறவை தான் செம்போத்து. தரையிலேயே தன் வாழ்கையை முடித்து கொள்ளும்.

இவற்றின் வாழிடம் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.மணப்பாக்கம் பாலத்தில் இருந்து கரையோரமாக இருக்கும் புதரில் ஒரு செம்போத்தை பார்த்தேன். அடுத்த மாதம் அங்கு சுவர் எழுப்பிவிட்டார்கள் அதனால் புதர்கள் அழிக்கப்பட்டத்தை பார்க்க முடிந்தது. அங்கிருந்த செம்போத்து இப்பொழுது எங்கு இருக்கும் என்ற நினைப்பு வருகிறது.

மணப்பாக்கம் பாலத்தில் இருந்து செம்போத்து பார்த்த இடம் இப்பொழுது புதர் அழிக்கப்பட்டு இருக்கும் படம்
வெட்டுக்கிளி, நத்தை, பறவைகளின் முட்டை, பல்லி, சுண்டெலி, சிறு பாம்புகள் என்று செம்போதின் உணவு நீண்டு கொண்டே செல்கிறது. 

வாழும் இடங்கள்:

வயல்வெளிகள், நம் வீட்டருகில், காடுகளில், புதர்களில் வாழும்   
RANGE :

இந்தியா முழுவதும் காணப்படுகிறது 

குறிப்பு:

IUCN Status – Least Concern
 
பறவையின் வட்டாரப்பெயர்கள்:

செம்பகம்

குக்கில்

செங்காகம்

செண்பகப்பட்சி 

படம்-விக்கிபீடியா
வீட்டு காக்கை (HOUSE CROW) :

காலையில் வீட்டின் முன்பு காகம் கத்தினால் அன்று வீட்டுக்கு விருந்தாளி வரப்போகிறார்கள் என்று நாம் நிறைய தடவை காகம் கத்தும் பொழுது வீட்டில் அதைப்பற்றி பேசியிருப்போம். இன்றும் கிராமபுரங்களில் இதைபோல் பேசும் மனிதர்கள் இருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது. மனிதர்கள் அருகில் வாழக்கூடிய மிக சில பறவைகளில் காகமும் ஒன்று.

இரண்டு விதமான காகங்களில், சாம்பல் கழுத்து மற்றும் கருப்பு உடல் கொண்ட காகத்தை வீட்டு காகம் என்று கூறுகிறோம். கூடி வாழம் பறவையான காகம், உணவு கிடைத்தவுடன் அருகில் இருக்கும் அணைத்து காகங்களையும் குரல் கொடுத்து வரவைத்துவிடும்.

இன்றும் கடவுளுக்கு படைத்த உணவை காகங்களுக்கு தான் நாம் வைப்போம். வேறு எந்த பறவைகளையும் மனிதர்கள் உறக்க குரல் கொடுத்து கூப்பிட்டு பார்திருக்கமாட்டோம் ஆனால் காகத்திற்கு ஊரே குரல் கொடுத்து உணவை வைப்பது தமிழ்நாடு முழுவதும் உள்ளது.

சைவம், அசைவம் என்று இல்லாமல் உணவுகளில் எதை வேடுமானாலும் உண்ணும் வழக்கமுடையது காகம். கோடைக்காலத்தில் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும் குயிலின் முட்டையும் காகத்தின் முட்டை அளவுடன் இருப்பதால் அவை காகத்தின் கூட்டில் போட்டுவிடும் காகத்திற்கு அதை கண்டுபிடிக்க முடியாதது குயிலுக்கு வசிதியாக போகிறது.

படம்-விக்கிபீடியா
மற்ற பறவைகள் போல் இருட்டியதும் தூங்காமல் காகம் நிலா வெளிச்சத்தில் நீண்ட நேரம் விழித்திருக்கும் மற்றும் இரவிலும் அங்கும் இங்கும் பறப்பதையும் பார்க்க முடியும் ஏன் இரவில் பறக்கிறது என்று தெரியவில்லை.

வாழும் இடங்கள் : 

நம் வீட்டருகில், வயல்வெளிகளில், Edges of Forest
RANGE :

இந்தியா முழுவதும் காணப்படுகிறது 

குறிப்பு :

IUCN Status – Least  Concern 

பறவையின் வட்டாரப்பெயர்கள்:

நல்ல காக்கா 

ஊர் காக்கா 

வீட்டு காக்கா 

மணியன் காக்கா 

வால் காக்கை (RUFOUS TREEPIE) : 

காகத்தை போலவே காணப்படும் ஆனால் மைனா அளவு இருக்கும் பறவைதான் வால் காக்கை. சாம்பல் நிறம் மற்றும் கருமை முனையுடைய வால், நீண்டு காணப்படும். மனிதர்கள் இயற்கையை கூர்நது கவனித்தால் வால்காகையை பார்க்க முடியும் ஆனால் எதுவும் நம் முன் வந்தால் தான் பார்ப்பேன் என்பவர்களுக்கு வால்காக்ககை தெரியாது.
படம்-விக்கிபீடியா
பழம், பூச்சிகள், சிறு பல்லிகள், பிற பறவைகளின் முட்டை,குட்டிகள் என்று உணவை கலவையாகவே சாப்பிடும் .கூட்டமாக காடுகளில் வசிக்கும்.நம் வீட்டருகிலும் இவற்றை பார்க்க முடியும்.பறவை நோக்க ஆரம்பித்து விட்டால் எல்லா பறவைகளும் நம் கண் முன்பு தெரிய ஆரம்பிக்கும்.

காகத்தை போல் இதன் அலகு தடித்து இருக்கும். கருப்பு தலையும், கருப்பு, வெள்ளை, சாம்பல் நிறத்தில் இறக்கை இருக்கும். இறக்கையில் வெள்ளை பட்டை காணப்படும். ஆண் பெண் ஒன்று போலவே இருக்கும்.

படம்-விக்கிபீடியா
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வால்காக்கையின் இனப்பெருக்க காலம் ஆகும் நான்கு முதல் ஐந்து முட்டைகள் வரை வெண் சிவப்பு நிறத்தில் இடும். இவை காடுகளிலும், நம் வீட்டு தோட்டத்திலும், வயல்வெளிகளிலும் காணப்படும். நான் வால் காக்கையை வேடந்தாங்கலில் பார்த்திருக்கிறேன் இரண்டு வால் காக்கை அங்கும் இங்கும் பறந்து கொண்டு இருந்ததை வெகு நேரம் பார்த்தேன். தனது கூட்டை மரத்தின் உயரத்தில் அமைக்கும் அதுவும் இலைகளின் நடுவில் யாருக்கும் தெரியாதது போல் அதன் கூடு அமைத்திருக்கும்.

வாழும் இடங்கள்:

காடுகள், வீட்டு தோட்டங்கள், வயல்வெளிகள், மலைகளில்
RANGE:

இந்தியா முழுவதும் காணப்படுகிறது 

குறிப்பு:

IUCN Status – Least Concern  

பறவையின் வட்டாரப்பெயர்கள்:

வால் காக்கை 

மாம்பழத்தான் 

அவரை கன்னி 

ஓலை நாலி 

முக்குருணி 

படம்- விக்கிபீடியா
அண்டங்காக்கை (JUNGLE CROW) :

தடித்த கருமை நிற அலகு, மிளிரும் கருமை நிறம் என தன் உடல் முழுவதும் கருமையை கொண்டிருக்கும் அண்டங்காக்கை வீட்டு காக்கை போல் கூட்டமாக வாழாது. தனித்து தன் இணையுடன் காணப்படும் மற்றும் சிறு குழுவாக சில நேரங்களில் பார்க்க முடியும்.

கோடையில் பெரும் மரத்தில் கூடு கட்டி நீல நிறத்தில் முட்டைகள் இடும், மிக சில நேரத்தில் கட்டிடத்தில் கூடு கட்டும். மனிதர்கள் இல்லாத இடத்திலும் வாழக்கூடிய பறைவையாக அண்டங்காக்கை இருக்கிறது.

நம் வீட்டருகே சாம்பல் நிற காகமும், அண்டங்காகமும் சுலபமாக பார்க்க முடியும். மிக சிறந்த சூழியல் துப்புரவாளராக (எல்லாவித உணவுகளையும் சாப்பிட்டு) காகங்கள் செயல்படுவதால் நம் ஊர் சுத்தத்திற்கு காசில்லாமல் நமக்கு வேலை செய்கிறது.

ரொம்ப சுலபமாக நம்மால் பார்க்க கூடிய பறவையாக காகங்கள் இருப்பதால் அவை ஒரு பறவையாக நமக்கு தெரிவதில்லை. 

வாழும் இடங்கள்:

காடுகள், நகர் புறங்களில், கிராமப் புறங்களில்
RANGE :

இந்தியா முழுவதும் காணப்படுகிறது

குறிப்பு:

IUCN Status – Least Concern

பறவையின் வட்டாரப்பெயர்கள்:

கானக் காக்கை 

தொன்னான் காக்கை 

காரி

- தொடரும் 


-செழியன் 
  

உங்கள் கருத்துக்கள் அடுத்த பாகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்: 

lapwing2010@gmail.com


முந்தய பாகங்கள் :


முதல் பாகம்

http://birdsshadow.blogspot.in/2016/05/1.html
இரண்டாம் பாகம்
http://birdsshadow.blogspot.in/2016/06/2.html

மூன்றாம் பாகம்
http://birdsshadow.blogspot.in/2016/07/3.html

நான்காம் பாகம் 

http://birdsshadow.blogspot.in/2016/09/4.html
 


Saturday 22 October 2016

புத்தகம்-2 "RED DATA BOOK"




தமிழில் காட்டுயிர் பற்றிய புத்தகங்கள் வருவது மிக மிக மிக குறைவு. அங்கொன்று இங்கொன்றுமாக தமிழில் வரும், அதனால் வருடம் தோறும் இயற்க்கை பன்னாட்டு அமைப்பு(IUCN) வெளியிடும் சிவப்புப் பட்டியல் (RED LIST BOOK)பற்றிய புத்தகத்தை நாம் தமிழில் எதிர்பார்த்தால்?

அதிசயமாக அப்படி ஒரு புத்தகம் வெளிவந்திருப்பதுதான் ஆச்சரியம். ஆசிரியர் சுப்ரபாரதிமணியன் அவர்களின் எழுத்தில் 23 உயிரினங்களை பற்றி விரிவான தகவல்களை தந்துள்ளார் அதில் பறவை, விலங்கு மற்றும் டால்பின் என்று கலந்தே எழுதியுள்ளார்.

இதுவரை தமிழில் வெளிவந்துள்ள புத்தகத்தை பற்றி இரண்டு கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.

http://birdsshadow.blogspot.in/2014/04/books-in-tamil.html

http://birdsshadow.blogspot.in/2015/02/books-in-tamil-ii.html

சிறிய புத்தகம் என்பதால் இரண்டு மணிநேரத்திற்குள் படித்துவிடலாம். தமிழில் காட்டுயிர் புத்தகங்கள் வருவதில்லை என்பதற்கு முக்கிய காரணம் யாரும் வாங்குவதில்லை என்பதே முதன்மையாக இருக்கிறது. அது உண்மை என்று நிரூபிப்பது போல் காட்டுயிர் என்ற பத்திரிக்கை ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேல் வெளிவருகிறது அனால் எத்தனை பேருக்கு பத்திரிக்கை வருவது தெரியும்? மற்றும் எத்தனை பேர் அவற்றை வாங்குகிறார்கள்? 

இரண்டு கேளிவிக்கும் பதில் – பத்திரிக்கை வருவதும் தெரியாது மற்றும் யாரும் வாங்குவதும் இல்லை என்ற பதில்தான் உடனே வரும். அதனால் சிவப்புப் பட்டியல் என்று புத்தகத்தை வாங்கி படியுங்கள் மற்றவர்களுக்கும் பரிசாக கொடுங்கள்.

புத்தகத்தில் இருந்து :

நாம் முன்பு அதிகம் பார்க்கும் அணில் தான் முதல் கட்டுரையாக தொடங்குகிறது அதை தொடர்ந்து வரையாடு,பறக்கும் அணில் என்று சுவாரசியமாக எழுதி செல்கிறார். மிக பெரிய கட்டுரையாக இல்லாமல் சிறியது இல்லாமல் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று பக்கத்தில் முடிவது போல் அணைத்து கட்டுரைகளும் இருக்கிறது.

பறக்கும் அணில் என்பது பறக்குமா என்ற கேள்விக்கு மரத்தை விட்டு அடுத்த மரத்திற்கு தாவுவதே பறப்பது போல் இருக்கும் அதுதான் பறக்கும் அணில். ஓநாய் என்ற கட்டுரையில் இரண்டு வித ஓநாய் மிக முக்கியமானது அதில் ஒரு ஓநாய்யான வெண் ஓநாய் காட்டு பகுதியில் இருந்து முற்றிலும் அழிக்க பட்டுவிட்டதாக சொல்கிறார்கள் என்று சொல்கிறார்.

நாம் அதிகம் கவனிக்காத மரப்பல்லி, அரணை போன்ற உயிரினங்கள் பற்றிய கட்டுரை முக்கியமானது இவையும் அழிவின் விளம்பில் உள்ளது. புலி மட்டுமே அழிவின் விளிம்பில் உள்ளதுபோல் விளம்பரங்கள் வருகிறது அனால் எண்ணற்ற உயிரினங்கள் இன்று இதே நிலைமைதான் என்று இந்த சிகப்பு பட்டியல் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

மொத்தம் 23 உயிரினங்களை பற்றி விவரிக்கிறது அனைத்தும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டு எங்களை கொல்லாதீர்கள் என்று மனிதர்களை பார்த்து சொல்லிக் கொண்டிருக்க்கும் உயிரினங்கள்

ஒரு சில மனிதன் கொல்கிறான் மற்ற சில மனிதர்கள் கொல்வது இயற்க்கைக்கு எதிரானது, அந்த உயிரினம் அழிந்து விடும் என்கிறார்கள், ஆக மனிதர்களால் ஏற்படும் ஆபத்து தான் மிக அதிக உயிரினங்கள் இந்த பூமியில் இருந்து அற்று போனதற்கு முக்கிய காரணம் அதையே இந்த புத்தகம் உரக்க சொல்கிறது.

கிடைக்கும் இடம்:

New Centaury Book House (p) Ltd

No-41, Sidco Industrial Estate

Ambatur,Chenaai-600 098

Phone-044-26251968, 26258410, 26241288

Rupees-65.00

-செழியன்    

Monday 10 October 2016

Flora and Fauna Exhibition in Chennai



பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள்  ஒரு படத்தை காண்பித்து ஒருவருக்கு விளக்கி சொல்லிக் கொண்டிருந்தபொழுது நான் உள்ளே நுழைந்தேன். ஒரு விசாலமான ஹால் மற்றும் இரண்டு சிறிய வராண்டா என்று அவர் எடுத்துள்ள படத்தால் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது. இன்னும் நிறைய படங்கள் உள்ளன  ஆனால் இடப் பற்றாக்குறையால் அவை என்னிடமே இருக்கிறது என்று அவருடன் பேசியபொழுது சொன்னார்.

பறவைகள், பட்டாம்பூச்சிகள், மலர்கள், ஒரு சில விலங்குகள் என்று தொடர்ச்சியான தேடலில் படங்கள் அவரிடம் குவிந்து விட்டன. ஒவ்வொரு படத்துக்கும் பின்னால் இருக்கும் கதையை அவர் சொல்ல சொல்ல சுவாரசியமாக செல்கிறது. உதாரணம்-தோட்டக் கள்ளன் (INDIAN PITA) படத்தை எடுப்பதற்கு முயற்சித்தபொழுது செம்போத்து வந்து மரத்தில் அமர்ந்ததை எதிர்பார்க்கவேயில்லை என்று நம்மிடம் சொல்லிவிட்டு உடனே செம்போதை படம் எடுத்து விட்டேன் ஏனென்றால் மிகுந்த கூச்ச சுபாவம் உள்ள பறவை செம்போத்து என்றும் அதன் குணத்தை விவரிக்கிறார்.

ஏறக்குறைய 230 படத்திற்கு மேல் நாம் பார்ப்பதற்கு அங்கு உள்ளன. உள்ளே சென்ற உடன் இடதுபுறம் செல்லுங்கள் மாடிப்படி ஒட்டி, பூச்சிகள் படங்கள் நம்மை வரவேற்கும் வேகமாக செல்லாமல் நிதானமாக பார்த்தால் நாம் எவ்வளவு தெரிந்து கொள்ளவேண்டும் என்று புலப்படும். படங்களுடன் அவற்றின் பெயரும் இருப்பதால் யாரிடம் பெயர் கேட்பது என்ற கேள்வியே எழுவதில்லை.

பார்க்க வரும் ஒவ்வொருவருக்கும் எடுத்த படத்தை பற்றி பொறுமையாக எடுத்து சொல்கிறார். நம்மிடம் பேசிக்கொண்டிருப்பார் மற்றவர் அழைப்பிற்கும் சென்று சொல்லிவிட்டு மீண்டும் நம்மிடம் வந்து தொடர்கிறார். சலிப்பாக இல்லாமல் முழுமனதுடன் அவரின் வார்த்தைகள் இருப்பதை பார்க்க முடிகிறது.

குக்குருவான் ஒன்று கூட்டில் இருந்து தன் தலையை வெளியே நீட்டி இருக்கும் படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் அதை மறக்க மாட்டார்கள். பச்சைக்கிளி குட்டி ஒன்று கைகளில் உணவு அருந்துவது போல் இருக்கும் படத்தை பற்றி கேட்டதற்கு பெற்றோரின் அதரவு இல்லாமல் தனித்துவிட பட்டிருக்கும் இது போல் இருக்கும் பறவைகளை உணவு அளித்து மீண்டும் அவற்றை பறக்க விட்டு விடுவதாக சொன்னார்.

பறவைகள் பட்டியல் :

1.Southern Cocual

2.Black Tailed Godwit

3.Coppersmith Barbet

4.Indian Pita

5.Black Drango

6.Hawlk Cuckoo

7.Hoopoe

8.Spotted Owlet

9.Sandpiper

10.Shikra

11.Orange Headed Thrush

12.Brown Breasted Flycatcher

13.parakeet

14.Barn Owl

15.Sun Bird

16.Red Winged Crested Cuckoo

17.White Browed Bulbul

18.Forest Wagtail

19.Indian Flycatcher

20.Golden Oriole……..Etc

இன்னும் நிறைய பறவைகள் படங்கள் அங்கு இருப்பதால் முடிந்த அளவுக்கு தந்துள்ளேன். பறவைகள் பற்றி மட்டும் அவரின் கவனம் செல்லாமல் மலர்கள், தாவரங்கள், பூச்சிகள்,விலங்குகள் என்று சுற்றுச்சூழலை முழுவதும் அங்கு பார்க்க முடிகிறது. பேச்சின் ஒரு இடத்தில் பறவைகளை எங்கு வேண்டுமென்றாலும் பார்த்துவிடலாம் ஆனால் இங்கு உள்ள தாவரங்கள், மலர்கள் பற்றி தெரிந்து கொள்ளவது ஒருவருக்கு கொஞ்சம் சிரமமே அதனால் இங்கு வருபவர்கள் இவற்றை பார்த்து தெரிந்துகொள்வது சிறந்தது என்றார்.


மலர்கள் :

Gul mahar

Ochna Btusata 

Glory Lily

Nagalinga

Fire Ball Lily

Cassia

Black pearl

Allamonda

                                                                                                       Rain tree

                                                                                                       Mimosa Pudika

இது போல் நடத்தப்படும் கண்காட்சியால் என்ன பயன் என்று பார்த்தல் நிச்சயம் இவை பள்ளி பிள்ளைகள், புதிதாக பறவை நோக்குபவர்கள் போன்றவர்களுக்கும் இது போல் ஒரு உலகம் இயங்கிகொண்டிருகிறது என்று தெரியாமல் இருக்கும் மனிதர்களுக்கும் நிச்சயம் பயன் அளிக்கும்.
நாள் முழுவதும் வேலை மற்றும் பணம் பற்றிய சிந்தனை என்று செயல்படும் இன்றைய உலகில் கண்காட்சியை பார்ப்பதால் மனநிறைவும் அவர்களின் கவனம் இயற்கையின் பக்கம் திரும்பவும் வாய்ப்புள்ளது. எனக்கு தெரிந்து இன்றைய கார்ப்ரேட் உலகில் அதி காலையில் இருந்தே சென்னை மனிதர்களின் மொபைல் ஒலிக்க ஆரம்பித்துவிடும் அந்த ஒலி இரவு பதினோரு மனிதாண்டியும் செல்லும். சில கம்பனியில் இரவு பத்து மணிக்கு மேல் தான் மீட்டிங் போடுவார்கள் இதில் இயங்கும் மனிதர்களுக்கு நாற்பது வயதே அதிகம் அதற்குள் அணைத்து வியாதிகளக்கும் சொந்தகாரர்கள் ஆகிவிடுவார்கள். நேரடியாக இதை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு.


எல்லோரும் பறவை, வன்னத்துபுச்சிகள், மலர்கள் நோக்குவது, இயற்கயை ரசிப்பது என்று தங்களுடைய கவனத்தை திருப்பினால் நிறைய பலன்களை அடையமுடியும் என்பதற்கு இந்த கண்காட்சி ஒரு சிறந்த உதாரணம்.

வன்னத்துபூச்சிகளில் இததனை வகைகளா என்னும் அளவுக்கு படங்கள் உள்ளன.

Common joker

Greypansy

Gram Blue

Common crow

White Cabbage

Crimson Rose.......Etc 


பூச்சிகளை எல்லாம் யார் பார்ப்பார்கள் அவை அருவரப்பானவை என்று ஒதுங்குவார்கள் நானும் இதுவரை கவனம் செலுத்தியதில்லை ஆனால் இங்கு நிறைய பூச்சிகளின் படங்கள் இருப்பது பறவை நோக்குவது போல் பூச்சிகளும் பார்க்கவேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.

ஒரு முறை பறவை நோக்குவதற்கு சிறிய குழுவாக சென்றோம் அதில் தந்தை, அவரின் ஆறாவது படிக்கும் மகன் என்று ஒருவர் வந்தார் நாங்கள் பறவைகளை பார்த்து கொண்டே வந்துகொண்டிருந்தோம் பையனின் அப்பா அவனுக்கு நிறைய பறவைகளை காண்பித்து கொண்டே வந்தார் ஆனால் அவன் ஒரு பறவையும் பார்க்காமல் அங்கு தென்படும் பூச்சிகளில் மட்டுமே கவனத்தை செலுத்திகொண்டிருந்தான் பூச்சிகளை பிடிப்பதும் அதை அவன் அப்பாவிடம் பெயர் கேட்டபது என்று அவன் செயல் இருந்தது. எதிர்காலத்தில் அந்த சிறுவன் பூச்சிகள் பக்கம் தன் கவனத்தை திருப்புவான் என்பதில் சந்தேகமே இல்லை.

பூச்சிகளின் பட்டியல்:

Jewel Bug

Wasp

Beetle

Lady Bug

Spit Bug

House Fly

Snail

Caterpillar

Honey Bee…………………..etc

பேராசிரியர் அவர்களின் ஆர்வம்,உழைப்பு,மற்றவர்களுக்கு எடுத்து சொல்லும் விதம்,அவரின் சுறுசுறுப்பு என்று அனைத்தும் அங்கு செல்லும் அனைவருக்கும் தொற்றிக்கொள்ளும்.

அனைவரும் சென்றுபார்த்தால் நிச்சயம் இயற்கையை உள்வாங்கி கொள்ள ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

                                                              -செழியன்