Monday 8 August 2016

புத்தகம்-1 "ஊர்ப்புறத்துப் பறவைகள்”



மாதம் இரண்டு காட்டுயிர் மற்றும் பறவைகள் பற்றிய புத்தகத்தை எழுதலாம் என்ற நினைப்பில் ஆரம்பித்துவிட்டேன். ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் இருந்தாலும் தமிழில் என்னும் அளவுக்கே புத்தகங்கள் வந்திருகிறது.

தமிழில் ஏன் வருவதில்லை என்ற கேள்விக்கு-பறவை நோக்குவது இன்றும் கீழ் நிலை,மத்திய தர மனிதர்களின் செயல்பாடாக இல்லை அவை மேல் நிலை மனிதர்களின் செயலாகவே காணப்படுகிறது அதனால் வரும் புத்தககங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது. 

வெகுஜன மனிதர்கள் விரும்பி படிக்கும் வார இதழ்களில் கூட இதுவரை பறவை மற்றும் காட்டுயிர் பற்றிய கட்டுரையோ,தொடரோ வரவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் இந்து தின பத்திரிகையில் சனிகிழமை தோறும் உயிர்மூச்சு என்ற தலைப்பில் காட்டுயிர், பறவை, விலங்கு என்று பலதர பட்டு கட்டுரைகள் வருவது மட்டுமே ஆறுதல் தரக்கூடிய விஷயமாக உள்ளது.

மிக சிறந்த காட்டுயிர் எழுத்தாளரான திடோர் பாஸ்கரன் அவர்கள் கூட அதிகமாக காட்டுயிர் பற்றி கட்டுரைகளை சிறு பத்திரிகையான உயிர்மையில் தான் எழுதி உள்ளார். அதனால் குறைந்த அளவே தமிழில் காட்டுயிர் சம்பந்தமாக புத்தகங்கள் வந்திருக்கிறது. இதில் மிக முக்கியமாக எதை கவனிக்க வேண்டும் என்றால்-வந்திருக்கும் குறைவான புத்தகங்கங்கள் கூட நம் மக்கள் வாங்கவில்லை என்பதுதான் நிதர்சனம். இவையும் குறைந்து அளவு புத்தகங்கள் வருவதற்கான காரணமும் ஆகும். 

அதனால் இதுவரை வந்த புத்தகத்தை பற்றி அடுத்து ஆறு மாதம், மாதம் இரண்டு கட்டுரையாக (குறுந்தொடராக) தொடர்ச்சியாக பார்ப்போம்.

முதல் புத்தகமாக நம் ஊர் புறத்தில் இருக்கும் பறவைகளை பற்றி சொல்லும் மிக முக்கியமான புத்தகத்தில் இருந்து தொடரை ஆரம்பிப்போம்.

புத்தகத்தின் பெயரே அழகாக உள்ளது மற்றும் என்ன மாதிரியான புத்தகம் இது என்றும் தலைப்பு தெரிவித்துவிடுகிறது. ”ஊர்ப்புறத்துப் பறவைகள்” ஆசிரியர் கோவை சதாசிவம் அவர்கள்.

ஒரு மாலை பொழுதில் இந்நூலை நீங்கள் வாசித்துக்கொண்டு இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்ற ஒரு வரி புத்தகத்தின் தொடக்கத்தில் வராமல் புத்தகத்தின் முடிவில் வருவது அமர்களமான வரியாகவே தெரிகிறது.

புத்தகத்தை மாலையில் வாசியுங்கள் என்று நம்மை கட்டாயபடுத்தாமல் கடைசியில் அந்த வரியை எழுதயுள்ளார். வாசிக்கும்பொழுது உண்மையாகவே அப்பொழுது மாலையாக இருந்தால் ஆசிரியருடன் சேர்ந்து நமக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கும். நான் வாசிக்கும்பொழுது மாலை கடந்துவிட்டது, இரவில் வாசித்து முடித்தேன். ஏனென்றால் கடைசியில் தானே அந்த வரி நம் கண்ணில்படுகிறது.

மொத்தம் இருபத்து ஐந்து பறவைகளை பற்றி படிக்க போரடிக்காமல் எழுதி சென்றுள்ளார். பறவைகள் படங்களுடன் கட்டுரைகள் இருப்பது படித்த உடன் சுலபமாக நினைவில் வைத்துகொள்ள முடிகிறது. 

ஆரம்ப பறவையாக தையல் சிட்டு நம்மை அழைக்கிறது. மாணவர் ஆசிரியர் இடையே நிகழும் உரையாடலாக அவற்றை எழுதியுள்ளது கதை படிப்பது போல் சுவாரசியமாக செல்கிறது. பெரும்பாலும் பறவைகளுக்கு அதன் பண்பை கொண்ட பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார்.

நம் ஊரை சுற்றி இருக்கும் பறவைகளை ஒருசேர படிப்பதற்கும் மற்றும் புதிதாக பறவை நோக்குபவர்கள் இந்த புத்தகத்தில் இருந்து தொடங்குவது சிறந்ததாக இருக்கும் என்பது என் நினைப்பு. நம் ஊரை சுற்றி இருக்கும் பறவைகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் காடு, மலை பகுதிகளில் சென்று பார்ப்பது இருப்பதை விட்டு பறக்க ஆரம்பிப்பதுபோல் இருக்கும்.
சீன பிதாமகன் மாசேதுங் சிட்டுக்குருவிகள் தம் அரசாங்கத்தால் அழித்த பிறகு கடைசியில் ஒரு சிட்டு குருவிகள் கூட இல்லை என்ற நிலை வந்த பிறகு ஆதங்க படுகிறார் அதாவது கடைசி பறவை அழிந்த பிறகே மாசேதுங்கு கவலை படுகிறார்.

ஊதாதேன்சிட்டின் குரல் 100 மீட்டர் வரை கேட்கும் என்ற தகவல் ஆச்சரியம் தருகிறது.ஒரு பறவைக்கு பல பெயர்கள் இருப்பதையும் பெரும்பாலும் அந்த பெயர்களையும் சேர்த்தே தருகிறார் ஆசிரியர்.

ஒரு ஆச்சரியமான செய்தியாக பறவைகளிலேயே மரங்கொத்திகளுக்குத்தான் நீளமான நாக்கு உள்ளதாக குறிப்பிடுகிறார். சிறிய புத்தகம் என்றாலும் நிறைய தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
  
செம்பகம் பறவை பற்றிய கட்டுரையில் வலசை பறவைக்கும், அதிகம் துரம் பறக்காத தரையில் கூடு கட்டி வாழும் பறவையான செம்பகம் பறவையை பற்றி குறிப்பிட்டுள்ளார். ஏன் பறவைகளில் இத்தனை வேறுபாடு என்பதற்கு - ஒரு சில பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் பறந்து செல்கிறது சில பறவைகள் பக்கத்து ஊருக்கு கூட செல்வதில்லை என்பதற்கு விளக்கம் இப்படி எழுதியுள்ளார் அதிக பறப்புத் திறன் கொண்ட பறவைகள் தான் உலகைச் சுற்றி வலசை வருகின்றன என்ற வரி உண்மை.

வெளிச்சம் பதிப்பகம்  ஊர்ப்புறத்துப் பறவைகள் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய பறவைகள் என்பதால் கண்டிப்பாக படிக்கவும்.

பதிப்பகம்:

வெளிச்சம் வெளியிடு 

1447, அவினாசி சாலை

பீளமேடு, கோயம்புத்தூர்-641004

Mobile-98947 77291


Rs-80/

                                                                                                                                                                        -செழியன் 

2 comments:

  1. அருமையான விளக்கம்.. நன்றி செழியன்

    ReplyDelete